பொங்கல்-சில நிமிடங்களிலேயே காலியானது ரயில் டிக்கெட்கள்
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இப்போதெல்லாம் விசேஷ காலங்களின்போது ரயில்வே டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகிறது. ஆன்லைன் புக்கிங் வந்ததால் இந்த நிலை.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாள்கள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 12-ம் தேதியன்றே சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்யக் காத்திருந்தனர்.
ஜனவரி 12-ம் தேதிக்கான 90 நாள்களுக்கு முந்தைய முதல்நாள் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கியதும் நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததன.
சில ரயில்களில் ஏசி வகுப்புக்களுக்கான டிக்கெட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன.
இதுவும் கூட இன்றைக்குள் நிரம்பி விடும் எனத் தெரிகிறது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்று விட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். வழக்கம் போல சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications