பாக். பிரதமர் கிலானியைக் கொல்ல சதி-7 பேர் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியைக் கொல்ல முயன்றதாக 7 பேரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தீவிரவாதியிடமிருந்து தங்களுக்கு இதுதொடர்பாக உத்தரவு வந்ததாகவும், அதை நிறைவேற்றத் திட்டமிட்டு வந்ததாகவும், கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி பாபர் பக்த் குரேஷி கூறுகையில், கிலானியின் முல்தான் இல்லத்தில் தாக்குதல் நடத்தி அவரைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றார்.
பஞ்சாப் மாநிலம் முல்தான் நகரில் கிலானியின் வீடு உள்ள வளாகம் இருக்கிறது. இங்குதான் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக குரேஷி கூறியுள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 395 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் குண்டு மூ்லம் தாக்குதல் நடத்த சதிகாரர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பெருமளவிலான வெடிபொருட்களையும் அவர்கள் வாங்கி வைத்திருந்தனர். இருப்பினும் இன்னும் காரை வாங்காமல் இருந்தனர். அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டு காரை வாங்க திட்டமிட்டிருந்தனராம்.
கைதானவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்கம், இரண்டரை கிலோ வெள்ளியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களுக்கு தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து தனிஅமைப்பை நடத்தி வரும் கரி இம்ராம் என்பவர்தான் கிலானியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த இம்ராம், வசிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவராவார்.












Click it and Unblock the Notifications