நெல்லையில் 743 பேருக்கு ரூ.12.79 கோடி கல்விக் கடன்: சபாநாயகர் வழங்கினார்
நெல்லை: நெல்லை மாவட்ட மாணவ, மாணவியர் 743 பேருக்கு ரூ. 12.79 கோடி கல்விக் கடனை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்கினார்.
நெல்லை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அதற்கு ஆட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 743 பேருக்கு ரூ.12.79 கோடி கல்விக் கடன் வழங்கி சபாநாயகர் ஆவுடையப்பன் பேசியதாவது,
நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசும், வங்கிகளும் சேர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றது.
நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கினாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி, தொழிற்கல்வி பயில நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.31 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வியை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் ரூ.53 ஆயிரம் கோடி மதிப்பிலான அன்னிய முதலீட்டில் கார் தொழிற்சாலை, உதிரி பாகத் தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த தொழிற்சாலைகளில் நம் வீட்டு பிள்ளைகள் பலரும் பணிபுரிகின்றனர். பணிபுரியவும் போகின்றனர். கல்விக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் அலைக்கழிக்க கூடாது. கல்விக்கு உதவும் மனோபான்மையுடன் வழங்க வேண்டும்.
அதே போல மாணவர்களும் பெற்ற கடனை உரிய காலத்திற்குள் வங்கியில் செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், அரசிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.