ஆரவாரமின்றி பிறந்த நாளை கொண்டாடிய அப்துல் கலாம்
ஆலப்புழா: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தனது 80வது பிறந்த நாளை எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல்,மிக எளிமையாக கொண்டாடினார்.
கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நேற்று மிக சொற்ப எண்ணிக்கையிலான தனது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் அமைதியாக பிறந்த நாளை கொண்டாடினார் கலாம்.
நேற்று அப்துல் கலாமின் பிறந்த நாளாகும். இந்த நாளில் அவர் ஆலப்புழையில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கலாம், தனது தனி உதவியாளர் ஆர்.கே.பிரசாத், ஆலோசகர் வி.பொன்ராஜ் மற்றும் சில நண்பர்களுடன் கேக் வெட்டி எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாடினார்.
தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கேரளாவில் கழித்தவர் கலாம். அந்த வகையில் நேற்று அவர் தனது 80வது பிறந்த நாளை கேரளாவில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி எந்த ஒரு அரசியல் தலைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.