கேரளாவில் ஆண் வேடத்தில் வீட்டு வேலை செய்த இளம்பெண் கைது
திருவனந்தபுரம்: ஆண் வேடத்தில் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் சாஜு. கடந்த 2 மாதங்களுக்கு முன் கண்ணூர் பேருந்து நிலையத்தில் வைத்து இவரை ஒரு வாலிபர் அணுகினார். அவர் தனது பெயர் கிரண் ஜோசப் என்றும், தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஏதேனும் வேலை இருந்தால் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரைக் கண்டு பரிதாபப்பட்ட சாஜூ அவரை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் கிரண் ஜோசப் நடவடிக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களுடன் கிரண் ஜோசப் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் பெரியகோ போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தான் அவர் ஆண் அல்ல 17 வயதான இளம்பெண் எனவும், இடுக்கி மாவட்டம் கட்டப்பானையைச் சேர்ந்த ஷில்பா எனவும் தெரிய வந்தது. அவர் எதற்காக ஆண் வேடமிட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.