காஷ்மீர் குறித்து விரைவில் நற்செய்தி வரும்-கூறுகிறார் கிலானி
லாகூர்: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலையை உலக சமுதாயம் அங்கீகரித்துள்ளது. எனவே விரைவில் இதுதொடர்பாக நற்செய்தி வரும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 'பிரதமர்' அதிக் அகமது கான் லாகூர் வந்திருந்தார். அவர் பிரதமர் கிலானியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் கிலானி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காஷ்மீர்ப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பாகிஸ்தான் பெரும்கவலையுடன் உள்ளது. காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் நிலையை உலக சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நற்செய்தி கிடைக்கும் என்றார்.
உடன் இருந்த அகமது கான் கூறுகையில், ஐரோப்பிய நாடாளுமன்றம், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதுகுறித்து அது அக்கறை காட்டவும் முன்வந்துள்ளது. இது பாகிஸ்தான் அரசின் மாபெரும் சாதனையாகும் என்றார்.
எந்த மாதிரியான நற்செய்தி என்பதை கிலானியும் சரி, அகமது கானும் சரி விளக்கவில்லை.