தவறான புள்ளிவிவரம் தருகிறார் பிரதமர்! - நிதீஷ் குமார் காட்டம்
பாட்னா: பீகாருக்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில், தவறான புள்ளி விவரங்களை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், என்று நிதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் லாலு, நிதிஷ்குமார் தலைமையிலான கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்ட தேர்தல் நெருங்குவதையொட்டி, பீகாரில் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நர்பாத்கஞ் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "சிறுபான்மையினருக்காக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களை முதல்வர் நிதிஷ்குமார் உரிய முறையில் செயல்படுத்தவில்லை. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தோல்வி அடைந்துவிட்ட நிதிஷ்குமார், மத்திய அரசு திட்டங்களுக்கு பெருமைத் தேடிக்கொள்ள முயலுகிறார். பீகாரில் மின்சாரம், சாலை வசதி, நீர்பாசன வசதிகள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி வருகிறது.
வளர்ச்சியின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவற்றை எந்தக் கட்சியின் அரசால் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்பதை பீகார் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பீகாரில் கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் அல்லாத அரசுகளால் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற காங்கிரசுக்கு வாக்களியுங்கள்", என்றார்.
மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களை பீகார் அரசு அமல்படுத்தவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மறுத்துள்ளார்.
மேலும் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகார் அரசு தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் எனக்கு வியப்பை அளிக்கின்றன. இவை முற்றிலும் பொய்யானவை.
பிரதமர் கூறுவதுபோல் 2004ம் ஆண்டு முதல் அந்த நிதி பீகாருக்கு வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே 2002ம் ஆண்டு முதல் அந்த நிதி பீகாருக்கு வழங்கப்பட்டு வருகிறது; மேலும் அது சிறப்பு நிதியும் அல்ல..." என்றார்.












Click it and Unblock the Notifications