பள்ளி மாணவனை கொலை செய்து நகை பணம் கொள்ளை: வத்தலகுண்டு அருகே கொடூரம்
வத்தலக்குண்டு : வத்தலகுண்டு அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவனை கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பெரியார் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர் செம்பட்டியில் உள்ள கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். 2-வது மகன் கவுதம் ( 15). இவர் பட்டிவீரன்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கவுதம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். பள்ளி வகுப்புகள் முடிந்து மாலையில் அதே பகுதியில் டியூசனுக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் பணியை முடித்துக் கொண்டு கணேசனும், விஜயாவும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததோடு, வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது அங்குள்ள அறையில் பதுங்கி இருந்த கவுதமின் நண்பன் மணிகண்டபிரபுவும் மற்றொருவனும் அங்கிருந்து ஓடினர்.
இதையடுத்து மகனை கணேசன் தேடியபோது, படுக்கை அறையில் கவுதம் மின் வயரால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். கவுதமின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே கணேசன் வீட்டிலிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 38 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமசாமி, வழக்குப் பதிவு செய்து கொலை செய்யப்பட்ட கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி பொது மக்கள் வத்தலக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications