டாஸ்மாக் கடையை உடைத்து குடித்த அதிமுக தொண்டர்கள்!
மதுரை: அதிமுக ஆர்ப்பாட்டம் நடந்த மதுரை பாண்டிகோயில் பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை சூறையாடி, உள்ளே இருந்த மதுப் பாட்டில்களை எடுத்துக் குடித்தனர் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு வந்த சிலர்.
அதிமுக ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிமுக கண்டனக் கூட்டத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் / கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
பல இடங்களில் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
தனது பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பை மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மதுரை முழுவதும் மாலை 4 மணியிலிருந்தே மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் இதனை மின்வாரியம் மறுத்தது. மதுரையில் வழக்கமாக இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. அதை திசை திருப்பி பேசுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கண்டன கோஷங்கள் எழுப்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கோஷங்கள் எதையும் எழுப்பவில்லை. மாலை 4.45க்கு பேச ஆரம்பித்தவர் 6.45க்குதான் முடித்தார். இரண்டு மணி நேரம் அழகிரி, கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்ப சினிமா ஆதிக்கம் குறித்துதான் அவர் பேசினார்.
தனது பேச்சினிடையே 6 எம்ஜிஆர் பாடல்களை வசனமாகப் படித்தார். இரண்டு குட்டிக் கதைகள் சொன்னார். கருணாநிதியை தீய சக்தி என்று வர்ணித்து படக்குக்காரன் பாம்பாட்டி கதை சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.












Click it and Unblock the Notifications