பிரதமர் வருகையின்போது தர்ணா: சந்திரபாபு நாயுடு கைது
ஹைதராபாத்: அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க ஹைதராபாத் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு தலைமையில் சந்திக்க முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், சந்திரபாபு நாயுடு தர்ணாவில் இறங்கினார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னேறும் உலகத்திற்கான அறிவியல் அகாடமியின் வருடாந்திர கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.
விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங்கை முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் வருவதற்கு முன் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சி தொண்டர்களும் பேகம்பேட் விமான நிலையத்தின் அருகே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அம்பர்பேட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்திலிருந்த படி சந்திரபாபு நாயுடு கூறுகையில், "விவசாயப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்துப்பேசுவது குற்றமா...நியாயமாக இவர்கள்தான் இப்படிப்பட்ட சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கைது செய்கிறார்கள்" என்றார்.