சென்னையில் 8 வயது சிறுவன் கடத்தல்-15 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
சென்னை: சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை போலீஸார், 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
சிறுவனின் உறவினர்களே பணத்திற்காக இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி 6வது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சசிகலா. இவர்களது ஒரே மகன் ஆனந்த். 8 வயதான ஆனந்த் அதே பகுதியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆனந்த், புதன்கிழமை மாலை டியூஷனுக்குச் சென்றான். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் மாதவரம் காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுத்தனர். போலீஸார் அவர்களை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தருமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து கொடுங்கையூரில் புகார் கொடுக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். இந்த நிலையில், சிவக்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரூ. 5 லட்சம் கொடுத்தால் சிறுவனை விடுவதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன் பின்னர் போன் ஏதும் வரவில்லை. இதனால் சிறுவனின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில் இரவில் மீண்டும் செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறினார். சிவக்குமாரும், அவரைப் பின் தொடர்ந்து போலீஸாரும் சென்றனர். ஆனால் பின்னர் எழும்பூர் வருமாறும், தொடர்ந்து பாரீஸ் கார்னர் வருமாறும் அலைக்கழித்தது கடத்தல் கும்பல்.
இந்த நிலையில் சிவக்குமாரைத் தொடர்பு கொண்ட கும்பல், ஜோலார்ப்பேட்டைக்கு பணத்துடன் வந்தால் சிறுவனை மீட்கலாம் எனக் கூறியது. இதையடுத்து ஜோலார்ப்பேட்டைக்கு பணத்துடன் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார் சிவக்குமார்.
மறுபக்கம், அழைப்பு வந்த செல்போன் எண் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை செல்போன் டவர் சிக்னல் மூலம் போலீஸார் விசாரித்தனர். அதில், அக்கும்பல் ஜோலார்ப்பேட்டை நோக்கி காரில் போய்க் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேலூர் அருகே போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். பள்ளிகொண்டா அருகே கடத்தல் கும்பல் காருடன் வந்தபோது அங்கு வைத்து போலீஸார் அவர்களை மடக்கினர். அப்போது சிலர் காரிலிருந்து குதித்துத் தப்பி விட்டனர். சிலர் மட்டும் பிடிபட்டனர். சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான்.
இந்தத் தகவல் சிவக்குமாருக்குத் தெரிவிக்கப்பட அவர் ஆனந்தக் கண்ணீருடன் பள்ளிகொண்டா விரைந்து வந்து மகனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தார்.
தற்போது கடத்தல் கும்பலையும், சிறுவனையும், போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் செயலில் சிவக்குமார் உறவினர்கள் சிலரே ஈடுபட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பணத்துக்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications