காஷ்மீரில் நடந்த 8 மணி நேர துப்பாக்கிச் சண்டை முடிந்தது-2 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபுரா, சம்பல் பகுதியில் உள்ள மலூரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 8 மணி நேரமாக நடந்து வந்த சண்டையின் இறுதியில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவனை உயிருடன் பிடித்தனர்.
மலூரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர் பாதுகாப்பு படையினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. கடந்த 8 மணி நேரமாக இந்த சண்டை நடந்தது.
இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமிருந்த ஒருவனை உயிருடன் பிடித்தனர் பாதுகாப்புப் படையினர். விசாரணையில் அவன் ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது.