ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை-அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் கைது
சேலம்: சேலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
சேலம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக குப்புராஜ் மகன் சிவகுரு உள்ளிட்ட சிலர் சென்னையில் சரண் அடைந்தனர். இந்த வழக்கை மாநில குற்ற புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை தலைவரும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ் என்கிற சுரேஷ் குமாருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலத்தில் உள்ள பாரப்பட்டி சுரேஷ் வீட்டை சுற்றி வளைத்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வழக்கறிஞர் சம்பத், அம்மாபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை வழக்கில் அமைச்சரின் தம்பி மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications