நாகர்கோவில் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்-கோர்ட் புறக்கணிப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கறிஞர்கள் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் கேவ் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செண்பகவள்ளி. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூன்று பேர் தனது செல்போனை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோட்டார் போலீசார் அந்த 3 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க அவசர கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடந்தது.
அப்போது பெண் வழக்கறிஞர் செண்பகவள்ளி மற்றொரு வழக்கறிஞர் கிரினிவாச பிரசாத் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்த போது அவர்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சிலர் கோஷம் எழுப்பினர்.
இதனால் கிரினிவாசபிரசாத், செண்பகவள்ளி ஆகியோருக்கும், மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இந்த நிலையில் வக்கீல்கள் செல்வகுமார், உதயகுமார், ஆதிலிங்கம் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை போலீசார் ரத்து செய்ய வேண்டும். மேலும் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கிரினிவாசபிரசாத், செண்பகவள்ளி ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.