ரப்பர் கழகம், வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்களுக்கு போனஸ்
சென்னை: தமிழக அரசின் ரப்பர் கழகம், தேயிலைத் தோட்டக் கழகம், வனத் தோட்டக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வானிபக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 886 பேருக்கும், தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்கள் 9 ஆயிரத்து 275 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கிடவும்; அதுபோலவே, அரசு ரப்பர் கழகப் பணியாளர்கள் 118 பேருக்கும், தேயிலை தோட்டப் பணியாளர்கள் 313 பேருக்கும், வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் 359 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம், வனத்தோட்டக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்ந்த 12 ஆயிரத்து 951 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் 2009-2010 ஆம் ஆண்டுக்குரிய போனஸாக வழங்கப்படும்.
குடிநீர் வடிகால் வாரியம்:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் மாதம் 9300-34800 ஊதியத்துடன், ரூபாய் 4300 தர ஊதியம் பெறும் பதவிகளில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்குப் போனஸ் சட்டத்தின்படி சம்பள உச்சவரம்பிற்கு விலக்களித்து, 2009-2010ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 4 ஆயிரத்து 493 பணியாளர்களுக்கு 1 கோடியே 57 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும்.
நுகர்பொருள் வாணிபக் கழகம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 2009-2010 ஆம் ஆண்டிற்குரிய 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கிடவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பருவகால சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், கிடங்குகளில் பணிபுரியும் தற்செயல் பணியாளர்களுக்கும் தலா 1500 ரூபாய் கருணைத் தொகை வழங்கிடவும் முதல்வர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பருவகாலப் பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் 32 ஆயிரத்து 249 பேருக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 13 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.