மே. வங்கத்தில் நடந்த ஞானேஸ்வரி ரயில் விபத்துக்கு நாச வேலையே காரணம்-ரயில்வே
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மே 28ம் தேதி நடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதற்கு நாச வேலையே காரணம் என்று ரயில்வே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் இது விபத்தாக கருதப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே விசாரணையில் இது நாச வேலை என்று தெரிய வந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் தலைமையில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையில், ரயில்வே டிராக் சேதப்படுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம். எலாஸ்டிக் ரயில் கிளிப்புகள் மற்றும் கிராஸ் லெவல் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் விபத்துக்குள்ளாகியதாகவும் அது தெரிவித்துள்ஏளது.
இந்த சதி வேலையே ரயில் விபத்துக்குள்ளாக காரணம் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடத் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா-மும்பை இடையிலான ரயில் இந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ். சம்பவத்தன்று அது தடம் புரண்டது. பின்னர் எதிர் திசையில் வந்த ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் தடம் புரண்டதால் விபத்துக்குள்ளானதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் நாச வேலை காரணமாகவே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தற்போது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.