அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கும் ஒபாமா வர வேண்டும்-சீக்கியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் அமிர்தசரஸ் பொற்கோவிலையும் சேர்க்க வேண்டும் என அமெரிக்க சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா செல்லும்போது நிச்சயம் பொற்கோவிலுக்கும் போக வேண்டும். பொற்கோவிலையும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
முன்னதாக பொற்கோவிலுக்கு ஒபாமா போவதில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொற்கோவிலுக்குள் செல்வோர் ஒன்று சீக்கியர்களாக இருக்க வேண்டும். சீக்கியர்களாக இல்லாதவர்கள், தலையில் துணியைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் ஒபாமா துணியெல்லாம் கட்ட மாட்டார் என்று அமெரிக்க அரசுத் தரப்பில் சொல்லப்படவே, அவரது நிகழ்ச்சி நிரல் பட்டியலிலிருந்து பொற்கோவில் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே நிச்சயம் ஒபாமா பொற்கோவிலுக்குச் செல்ல வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அரசை வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கையும் அமெரிக்க சீக்கியர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் மதம் மற்றும் கல்விக்கான சீக்கிய கவுன்சிலின் தலைவர் ராஜ்வந்த் சிங்வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயண நிகழ்ச்சி நிரல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிப்ஸ் கூறுகையில், இந்தியா ஒரு மாபெரும் நாடு. அந்த நாட்டில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள அதிபர் திட்டமிட்டுள்ளார். ஆனால் மிகப் பெரிய நாடான இந்தியாவில் மேலும் சில நாட்கள் இருப்பதையும் அவர் விரும்புகிறார்.
மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் வர்த்தகம் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து அதிபர் அக்கறை காட்டுகிறார். அதேசமயம், பிற இடங்களுக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் இறுதியாகவில்லை என்றார் கிப்ஸ்.