ஓடும் விமானத்தில் பெண்ணிடம் விஷமம்-61 வயது இந்தியருக்கு சிறை
வாஷிங்டன்: விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தூங்கிய பெண்ணின் ரகசிய இடத்தில் கையை வைத்து சில்மிஷம் செய்ததாக 61 வயதான இந்திய வம்சவாளியைச் சேர்ந்த அமெரிக்கரைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபரின் பெயர் ரன்சோத்பாய் லகா. ஜார்ஜியாவின் அல்பரேட்டாவைச் சேர்ந்தவர். இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர். இவர் செப்டம்பர் 28ம் தேதி டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், டல்லாஸிலிருந்து அட்லான்டா சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு அருகில் பயணித்த 20 வயதுப் பெண் தூங்கும்போது அவரது இடுப்புக்குக் கீழே கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதைப் பார்த்து விழித்த அந்தப் பெண், லகாவின் கையைத் தட்டி விட்டார். ஆனாலும் விடாத லகா, மீண்டும் கையை வைத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் எழுந்து நின்று விமான ஊழியர்களின் உதவியை நாடி குரல் கொடுத்தார்.
பின்னர் விமானம் தரையிறங்கியதும் லகாவைப் போலீஸார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். ஏற்கனவே அலபாமாவிலும் இதுபோல லகா நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்து எப்பிஐ விசாரித்து வருகிறது.
தற்போது லகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.