கொசு மருந்து கரும்புகையால் சிறுமியின் முகம் கருகியது
சென்னை: கொசு மருந்து அடிக்கும் வண்டியின் பின்னால் ஓடிய சிறுமியின் முகம், புகை பட்டு கருகிப் போனது.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வண்டி மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
ஆர்.கே. நகர் 1-வது தெருவில் கொசு மருந்து வண்டி சென்றபோது அங்குள்ள சிறுவர், சிறுமியர் வண்டிக்குப் பின்னால் ஒடினர். அவ்வாறு ஓடியவர்களில் ஒருவர் செல்வம் என்பவரின் மகள் லத்திகா (7). கொஞ்ச தூரம் ஓடிய அவள் திடீரென்று முகத்தைப் பிடித்துக் கொண்டு அலறினாள்.
அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுமியின் முகம் கருகியிருந்தது. உடனே சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லத்திகாவின் தந்தை செல்வம் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து துறை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் புகார் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அவர்கள் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொசு மருந்து வண்டியில் இருந்து வந்த கரும் புகை, அனல் பறக்க வந்ததால்தான் சிறுமியின் முகம் கருகியதாகவும் எனவே கொசு மருந்து வண்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.