கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ. 2 1/2 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து எரிசாராயம் கோவை வழியாக கேரள மாநிலத்துக்கு அடிக்கடி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
மதுக்கரை, மரப்பாலம் அருகில் கேரள மாநிலத்தை நோக்கிச் சென்ற ஒரு டெம்போ வேனை கோவை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து படை சப்-இன்ஸ்பெக்டர் முகமது யூசுப் தலைமையிலான போலீசார் தடுத்து சோதனை செய்ய முயன்றனர்.
இதனை அறிந்த வேனில் இருந்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர். அப்போது அதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். போலீஸ் விசாரணையில் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஸ்லாம் (23) என்று தெரிய வந்தது.
போலீசார் வேனை சோதனைபோட்டபோது அதில் 34 கேன்களில் தலா 35 லிட்டர் எரிசாராயம் வீதம் மொத்தம் 1190 லிட்டர் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 2 1/2 லட்சம் ஆகும். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications