திருமணத்தை நிறுத்துமாறு 17 வயது மாணவி மகளிர் ஆணைய தலைவியிடம் மனு
கிருஷ்ணகிரி: தனக்கு நடக்கவுள்ள கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 17 வயது மாணவி மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியனிடம் நேரில் மனு கொடுத்தார்.
இதையடுத்து இந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும், இந்த மாணவி அரசு விடுதியில் தங்கிப் படிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தால் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவான நிலுவை வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மகளிர் நல ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் அருண் ராய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவுல் நிருபர்களிடம் பேசிய சற்குணபாண்டியன், கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்புடைய 13 நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் முன்று வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஜீவா தனது தாய் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறும் மனு கொடுத்தார்.
இந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும், இந்த மாணவி அரசு விடுதியில் தங்கி படிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இளம் வயது திருமணங்களைத் தடுப்பது குறித்து இந்த மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. கிராமசபை கூட்டங்கள் மூலமாகவும் ஊர் பெரியவர்கள் மூலமாகவும், சமுக நலத்துறை பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன் என்றார்.