சர்வதேச கோர்ட் எனது வழக்கை விசாரிக்கட்டும்-கசாப்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கசாப்புக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை உறுதி செய்யும் வழக்கு தற்போது பாம்பே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறான் கசாப். வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடந்தபோது கேமராவைப் பார்த்து எச்சிலால் துப்பினான். தற்போது இந்த விசாரணையே போலியானது, எனது வழக்கை சர்வதேச கோர்ட்டுக்குக் கொண்டு போங்கள் என்று கூறியுள்ளான்.
நேற்று உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் தனது வாதத்தைத் தொடர்ந்தார். அப்போது கசாப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் சுமத்தினார். அவர் கூறுகையில், கசாப் உள்ளிட்ட மும்பைக்குள் ஊடுறுவிய 10 தீவிரவாதிகளும் ராஜ்பவன் அமைந்துள்ள மலபார் ஹில்ஸ் பகுதியிலிரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதி அபு இஸ்மாயிலிடமிருந்து கைப்பற்றப்பட்ட மேப்பில், மலபார் ஹில்ஸும் குறிக்கப்பட்டிருந்தது. மலபார் ஹில்ஸ் பகுதியில் ராஜ்பவன் தவிர பல்வேறு விஐபிக்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.
அப்போது கசாப்பின் வழக்கறிர்கள் அமீன் சோல்கர், பர்ஹானா ஷா ஆகியோர் நீதிபதிகளிடம் கூறுகையில், கசாப் பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளான். தனது வழக்கை சர்வதேச கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச கோர்ட் எனது வழக்கை விசாரிக்க வேண்டும். இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்திய கோர்ட்களில் எனக்கு நியாயம் கிடைக்காது என்று கசாப் கூறியுள்ளான்.
தன்னை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், செய்தித் தாள், படிக்க புத்தகம் என எதுவும் தரவில்லை என்று அவன் கூறுகிறான். வெளியுலகுடன் தனக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தனிமைச் சிறையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறான்.
வீடியோ கான்பரன்சிங் விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை, நேரடியாக தன்னை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறான். அவனிடம் நேரில் விசாரணைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமங்கள் குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால் அவன் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறான் என்றனர்.












Click it and Unblock the Notifications