பிரதமர், சோனியாவைத் தொடர்ந்து அமைச்சரவைச் செயலாளரும் கல்மாடியைப் புறக்கணித்தார்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மத்திய அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரும், காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியை புறக்கணித்து அவமதித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் முடிந்த கையோடு அது தொடர்பான ஊழல்களை விசாரிக்கத் தொடங்கி விட்டன மத்திய அரசின் ஏஜென்சிகள். இதையடுத்து கல்மாடியை அரசுத் தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியின்போது கல்மாடிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுக்காமல் புறக்கணித்தார். அதேபோல பதக்கம் வென்றவர்கள் சோனியாவை சந்தித்த நிகழ்ச்சிக்கும் கல்மாடி அழைக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகரும் கல்மாடியைப் புறக்கணித்துள்ளார். அவர் காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக ஒரு நன்றி கூறும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கண்கணா, பல்வேறு போட்டி தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் கல்மாடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
விருந்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications