வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை அமைக்க கி.வீரமணி கோரிக்கை
வேலூர்: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைக் காப்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறையை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7-ம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பேரணியும் நடைபெறும்.
இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சியிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல் படும் நிலை இன்றும் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு நேரடியாக தலையிட்டு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தனி அமைப்பு உள்ளது.
தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். தமிழக சட்டப் பேரவையிலும் இதுகுறித்த தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி, அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். பிற்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதே தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் பட்டதாரிகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் தமிழில் தேர்வுகளை எழுதும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications