ஓ.எஸ்.மணியன் வந்த கார் மீது மற்றொரு கார் மோதல்-2 பேர் பலி-மணியன் தப்பினார்
திருவாரூர்: மயிலாடுதுறை அதிமுக எம்.பி. ஓ.எஸ்.மணியன் வந்த கார் மீது இன்னொரு கார் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மணியன் காயத்துடன் உயிர் தப்பினார்.
நெல்லை மாவட்டம், கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் டேவிட்பொன்ராஜ் (30). இவரது தம்பி ஜெபராஜ் (26). மைத்துனர் அன்புராஜ் (30). இவர்கள் 3 பேரும் காரைக்கால் அருகே நெடுங்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் ஊருக்கு நேற்று திரும்பிக்கொண்டிருந்தனர். காரை நெல்லை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ஜெபராஜ் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
திருவாரூர் அருகே ஊர்குடி மடப்புரம் என்ற இடம் அருகே சென்றபோது, தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யுமான ஓ.எஸ்.மணியன் வந்த காரின் மீது டேவிட்பொன்ராஜ் வந்த கார் பயங்கரமாக மோதியது.
விபத்தில் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். டேவிட்பொன்ராஜ், ஜெபராஜ், அன்புராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உடனே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே டேவிட்பொன்ராஜ் இறந்தார்.
விபத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.பி., அவரது காரில் பயணம் செய்த நாகை நகரசபைத் தலைவர் சந்திரமோகன் மற்றும் வெற்றியழகன், முத்துமகாலிங்கம், டிரைவர் குமார் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.
அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.












Click it and Unblock the Notifications