ராகுல் காந்தியை கங்கையில் தான் தூக்கி வீச வேண்டும்-சரத் யாதவ் ஆவேசம்

இந்திய அரசியல் முறை குறித்து ராகுலுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் அவர் கோபமாக கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் பாதுவா என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
அரசியலைப் பற்றி ராகுல் காந்திக்கு என்ன தெரியும். அவருக்கு ஒன்றும் தெரியாது. சிலர் பேப்பரில் எழுதிக் கொடுப்பதை வைத்துக் கொண்டு பேசுகிறார். இது அரசியலா.
நமது நாடு மிகவும் துரதிர்ஷ்டவசமான நாடு. காரணம், நமது மக்கள் மிகவும் பலவீனமானவர்களாக உள்ளனர். முதலில் ராகுலைத் தூக்கி கங்கையில் போட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார அரசியலை அது நடத்தி வருகிறது. அது மட்டுமல்ல, எல்லோருமே இப்போது குடும்ப அரசியலைத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் கருணாநிதயும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இப்படி பலரும் கிளம்பியுள்ளனர். எத்தனை பேருடன்தான் நான் சண்டை போடுவது என்றே தெரியவில்லை என்றார் சரத் யாதவ்.
அதேசமயம் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதீஷ் குமார் ராகுல் காந்தி குறித்துப் பேச மறுத்து விட்டார். ராகுல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் இளம் தலைமுறையினர் குறித்து மட்டுமே பேசுவேன். இளம் தலைமுறையினருக்கான ரோல் மாடல் குறித்துப் பேச மாட்டேன்.
இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைஞனும் ஒரு ரோல் மாடல்தான். இப்போதைய தலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். எனவே அவர்களைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட நபர் குறித்தும் நான் பேச விரும்பவில்லை என்றார்.
காங்கிரஸ் கடும் கண்டனம்:
சரத் யாதவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சரத் யாதவ் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவும் அது கோரியுள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரேம் சந்திர மிஸ்ரா கூறுகையில், காந்தி நேரு குடும்பம் குறித்து சரத் யாதவ் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாதவின் பேச்சு அவமரியாதையான ஒன்று மட்டுமல்ல, கிரிமினல் தனமான ஒன்றும் கூட என்றார் அவர்.












Click it and Unblock the Notifications