ஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதி! - பழ நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

Nedumaran
இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களை ஒன்றுபடுத்த அமரர் எம்ஜிஆர் முயன்றார்... ஆனால் அவர்களைப் பிளவுபடுத்தி அதில் வெற்றியும் கண்டவர் முதல்வர் கருணாநிதி, என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் பத்திரிகைப் பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:

கேள்வி: போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி இருக்கிறாரே?

பதில்: இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காங்கிரஸும் தி.மு.க-வும்தான் பொறுப்பு!

ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களைப் பதைபதைக்கப் படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஓர் அங்கமாக இருந்தும், தமிழர் அழிவைத் தடுக்க தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்களை மட்டும் அரங்கேற்றியது.

முள்வேலி முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே கொதித்துப் போராடியபோது, சர்வ கட்சிக் குழுவை அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்களை மட்டும் அங்கு அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பி வந்த பிறகு அவரே ஓர் அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் மூன்று மாதங்களில் அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி தந்துவிட்டார் என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும் கூறினார் கருணாநிதி. ஆனால், இன்னமும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில்தான் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என இப்போது அவரே கூறுகிறார். காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் உள்ள உறவில் நெருடல் ஏற்படும்போது, ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுப்பதும்... திராவிடம் பற்றிப் பேசுவதும் அவரது அரசியல் தந்திரங்கள். உறவு இணக்கமாக இருக்கும்போது, அதைப்பற்றி மூச்சுகூட விட மாட்டார்!

கேள்வி: போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே, மத்திய அரசு தலையிட்டுத் தடுக்க வேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறிக்கொண்டுதானே இருந்தார்?

பதில்: மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள இராணுவத்தில் 63 சதவிகிதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008-09 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப் பொருள்கள், ஆயுதங்கள் கொண்டுவந்த 13-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை அழித்தது. வெளியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்த வித ஆயுத உதவியும் வராதவாறு, இந்தியக் கடற்படை தடுத்தது.

இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்டினென்ட் ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். உச்சகட்டமாக... ஏவுகணைகள், ராடார்களுடன் அவற்றை இயக்க இராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பி வைத்தது.

இவை எல்லாம் நடந்தபோதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் அரசு உயிர் பிழைத்தது. உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்தால்... மத்திய அரசுக்கான ஆதரவை அப்போதே விலக்கி இருக்க வேண்டும்; அப்படிச் செய்து இருந்தால், காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கும்; அதே சமயம், காங்கிரஸ் உதவியால் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசையும் காங்கிரஸ் கவிழ்த்து இருக்கும். எனவே, தனது அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கருணாநிதி பலிகொடுத்தார் என்பதுதான் உண்மை!

கேள்வி: போர் நிறுத்த முயற்சிபற்றி எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறினாரே?

பதில்: இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்சே வின் தம்பி பசில் ராஜபக்சே சில உண்மைகளை வெளியிட்டார். 'போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்' என்பது பசில் ராஜபக்சேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால், போர் நிறுத்தம் குறித்து ராஜபக்சேவிடம் வலியுறுத்துவதற்காகவே எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றினார்!

கேள்வி: போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, ஈழத் தமிழ்ப் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரசாரம் செய்வதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே?

பதில்: ஜெயலலிதா, அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாத தவறு. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்!

ஈழத் தமிழர் பிரச்னை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்த இவர் என்ன செய்தார்? தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான அருகதையை இழந்துவிட்டார். ராஜபக்சேவைப் பாதுகாப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ... அதை எல்லாம் இன்னமும் தவறாது செய்கிறார் கருணாநிதி!

கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?

பதில்: சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'.

அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார்.

அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே!

-இவ்வாறு அந்தப் பேட்டியில் நெடுமாறன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+