கத்தாரில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசுக்கு ஜெ. கோரிக்கை
சென்னை: கத்தார் நாட்டு சிறையில் தவித்து வரும் 32 தமிழக மீனவர்களையும் பத்திரமாக மீட்டு அவர்களை அவர்களது குடும்பத்தோடு இணைக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த, கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தைச் சேர்ந்த 18 மீனவர்களும், இனையம், முட்டம், பெரியவிளை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 14 மீனவர்களும், ஆக மொத்தம் 32 மீனவர்கள், 10.7.2010 அன்று 6 விசைப்படகுகளில் சவுதி அரேபியாவில் உள்ளதரின் என்ற இடத்திலிருந்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தவறுதலாக கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்ததன் காரணமாக, கத்தார் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கைது செய்யப்பட்டவர்களை மீட்க அவர்களை வேலைக்கு அமர்த்தியவர் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், தமிழக மீனவர்களை வேலைக்கு அமர்த்திய சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர் தமிழக மீனவர்களை மீட்க அதிகம் பணம் செலவாகும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுத்து இருக்கிறார்.
தவறுதலாக கடல் தாண்டிய குற்றத்திற்காக தமிழக மீனவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் இரண்டு ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது 28 மீனவர்கள் ஜெனயா சிறையிலும், 4 மீனவர்கள் சென்ட்ரல் மார்க்கசி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
32 மீனவர்கள் சிறையில் வாடுவதை எண்ணி, எண்ணி, உணவின்றி, உறக்கமின்றி, நிம்மதியின்றி, கவலையோடும், கண்ணீ ரோடும் ஒவ்வொரு நாளையும் கழிக்கக் கூடிய அவல நிலை அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
32மீனவர்கள் மட்டுமல்லாமல், அந்தக் குடும்பங்களைச் சார்ந்தவர்களும் தற்போது அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
கத்தார் நாட்டு சிறைச்சாலைகளில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு, இப்பொழுதாவது தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி, அந்த 32 மீனவக் குடும்பங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினர் சார்பாக திமுக அரசின் முதல்வர் கருணாநிதியையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications