திருப்பூர் அருகே பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு-23 பேர் காயம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொழுமம் பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 23 பேர் படுகாயமடைந்தனர். பஸ்கள், கடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
வயல்கள், தோட்டங்களுக்குள் ஊடுறுவும் காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விரட்டுவது விவசாயிகளின் வழக்கம். திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் விவசாயிகளுக்கு வெடிகுண்டுகளை சப்ளை செய்து வரும் ஒரு நபர் நாட்டு வெடி குண்டுகளை டிராக்டரில் போட்டுக் கொண்டு இன்று சென்றார்.
பஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர் வந்தபோது டிராக்டரில் இருந்த ஒரு வெடிகுண்டு பை கீழே விழுந்து விட்டது. அந்த பை மீது டிராக்டர் ஏறிய அடுத்த விநாடி, பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் 6 பெண்கள், 4 மாணவர்கள் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நின்றிருந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன கடைகளிலும் சேதம் ஏற்பட்டது. குண்டுவெடித்ததைத் தொடர்ந்து மக்கள் அலறி அடித்து ஓடினர். கடைகள் அடைக்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஒரு பெண் மட்டும் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications