ராஜீவ் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம்-முதியவர் தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர்: சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸார் நடத்திய போராட்டத்தின்போது முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அசோக் நகரில், ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று 2வது நாளாக காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
ராயபுரம் பாலத்தின் அருகே மாநில அமைப்பு செயலாளர் திரவியம் தலைமையில் ரங்கபாஷ்யம் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரசார் மறியல் செய்தனர். பின்னர்அவர்களை கைது செய்துஅப்புறப்படுத்தினர்.
அதேபோல வியாசர்பாடி, சைதாப்பேட்டை சின்னமலை ஆகிய இடங்களிலும் போராட்டம் நடந்தது. சின்னமலையில் உள்ள ராஜீவ் சிலைக்கு காங்கிரஸார் 25 குடம் பாலை ஊற்றி அபிஷேகம் செய்து, ஆரத்தியும் காட்டினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த தலைவர் அன்பரசு கூறுகையில்,
தேச தலைவர்களின் சிலைகளை அவமரியாதை செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய- மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவேண்டும்.
திருமாவளவன்தான் இந்த பிரச்சினைகளை தூண்டுகிறார் என பரவலாக பேசப்படுவதால் திருமாவளவனை கைது செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும். ராஜீவ் சிலை அவமதிப்பில் கண் துடைப்புக்காக 2 பேரை கைது செய்ததை ஏற்க முடியாது என்றார்.
திருவள்ளூரில் தீக்குளிப்பு முயற்சி:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டையிலும் காங்கிரசார் ஆர்பாட்டம் செய்தனர்.
அப்போது சோனியா பேரவை வட்டார துணை தலைவர் வேணு கோபால் நாயுடு (60) என்பவர் உணர்ச்சி பெருக்கில் மண்ணெண்ணை கேனை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உள்ளே பாய்ந்து பெரியவரை தடுத்து நிறுத்தி கேனைப் பிடுங்கினர்.
கார்த்தி சிதம்பரம் கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கடுமையாக விமர்சித்த கார்த்தி சிதம்பரத்தின் கொடும்பாவியை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, முன்னாள் மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் தலைமையில், கார்த்தி சிதம்பரத்தின் கொடும்பாவியை அக்கட்சியினர் எரித்தனர்.
இதையடுத்து கொடும்பாவியை எரித்த 12 தொண்டர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications