அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல்.. ஜெ தாக்கு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல், தமிழக அரசு தரும் ரூ.75 ஆயிரம் மானியத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கிற குடிசை வீட்டையும் இடித்துத் தள்ளிவிட்டு மாட்டிக் கொண்டு விட்டோமே என்று குடிசைவாழ் மக்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களான சிமெண்ட், மணல், செங்கல், இரும்புக் கம்பி ஆகியவற்றின் விலைகள் கடந்த இரண்டே மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துவிட்டன. 150 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்டின் விலை தற்போது 320 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதே போன்று, 16 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டு வந்த ஒரு லாரி செங்கல்லின் விலை தற்போது 27 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

4 ஆயிரத்து 500 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டு வந்த 2 யூனிட் மணலின் விலை தற்போது 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பியின் விலை டன்னுக்கு 3000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக, வீடு கட்டும் பணிகளை துவக்கிய சாதாரண ஏழை, எளிய மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். திட்டமிட்டதை விட இரு மடங்கு செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதன் காரணமாக, கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்த வேண்டிய அவல நிலைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பங்குச் சந்தை நிலவரத்தைப் போன்று, கட்டுமானப் பொருட்களின் விலை நிலவரமும் ஆகிவிட்டது.

வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் ஏழை மக்களின் நிலைமை இதைவிட மோசமாகிவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்தத் தொகையில் வீட்டிற்குத் தேவையான இரும்புக் கம்பி, சிமெண்ட், கதவு, ஜன்னல் ஆகியன வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டும் இதர பணிகளுக்காக பயனாளிகளுக்கு நான்கு கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கட்டுமானப் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ள இந்தச் சூழ்நிலையில், ரூ.75 ஆயிரம் வைத்துக் கொண்டு 100 சதுர அடி வீடு கட்டுவது என்பது கூட இயலாத காரியம். இந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்ட போது, பணம் இல்லை என்று வங்கியில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் தாங்கள் குறிப்பிடும் நபர்களால் கட்டப்பட வேண்டும் என்று திமுகவினர் மிரட்டுவதாகவும்; இதனை மீறி செயல்பட்டால், மானியத் தொகையை வரவிடாமல் செய்துவிடுவோம் என்று அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல்,ரூ.75 ஆயிரம் மானியத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கிற குடிசை வீட்டையும் இடித்துத் தள்ளிவிட்டு மாட்டிக் கொண்டு விட்டோமே என்று குடிசைவாழ் மக்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப் படுத்தாமல், ஏழை, எளிய, சாமானிய மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிமெண்ட், செங்கல், மணல், இரும்புக் கம்பி ஆகியவற்றின் விலைகளை குறைத்திடவும்; வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொள்பவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்றும்; வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வட சென்னை அதிமுக செயலாளர் ஜெயக்குமார்:

வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு, கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பிலும், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் அதிமுக பொறுப்பாளராகவும் இருந்து வரும் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

சேகர்பாபு எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.

திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் அதிமுக பொறுப்பாளராக இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+