முல்லைப் பெரியாறு அணை ஆய்வு-கருணாநிதியுடன் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஆலோசனை
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பலம் குறித்து உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது ஆய்வைத் தொடங்கவுள்ள நிலையில் அதுகுறித்து முதல்வர் கருணாநிதியுடன், தமிழக அரசின் பிரதிநிதியான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆய்வு குறித்தும் விளக்கினார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், அணையின் பாதுகாப்பு, பலம் குறித்து ஆய்வு செய்ய ஐவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைவராக இருக்கிறார். தமிழகம், கேரளம் சார்பில் தலா ஒரு பிரதிநிதியும், மத்திய அரசின் சார்பில் 2 பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழு அணையை ஆய்வு செய்வதோடு, இரு மாநில அரசுகளுடனும் ஆலோசனை நடத்தி அவர்களது கருத்துக்களையும் கேட்டு ஆறு மாதத்திற்குள் அரசியல் சாசன பெஞ்ச்சிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
தற்போது அணையை நேரடியாக ஆய்வு செய்ய ஐவர் குழு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது.
இந்தப் பின்னணியில்நேற்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டுக்குச் செனறு சந்தித்தார் ஏ.ஆர்.லட்சுமணன். அணை ஆய்வுப் பணி குறித்து அவர் விவரித்தார்.
பின்னர் வெளியில் வந்த லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு, வரும் டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நான் உள்ளிட்ட குழுவினர், மதுரையில் இருந்து புறப்பட்டு, தேனி, குமுளி வழியாகச் சென்று, தமிழகத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை பகுதியை பார்வையிடுகிறோம்.
அதன்பிறகு, தேக்கடி சென்று கேரள பகுதியில் உள்ள முல்லை-பெரியாறு அணைப்பகுதியை ஆய்வு செய்யவுள்ளோம். இந்த பயணம் சாலை வழியாக இருக்கும். எங்களது பயண விவரத்தை பற்றி முதல்வரிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறேன்.
இதுபோல், ரஷிய நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தை அறிந்து கொள்வதற்காக, அங்கு சென்று வந்தேன். அப்போது, மாஸ்கோ பல்கலைக்கழகத்தில், தமிழ் பிரிவு செயல்படுவதையும், அதில் 20 மாணவர்கள் தமிழ் கற்பதையும் அறியமுடிந்தது. அவர்களுக்கு, அலெக்சாண்டர் என்ற பேராசிரியர் தமிழ் பயிற்றுவித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கோவை மாநாட்டில், தொல்காப்பியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையை அலெக்சாண்டர் சமர்ப்பித்துள்ளார். அவர், ரஷியாவில் தமிழை பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழ் பேராசிரியரை 2 ஆண்டு காலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றியும் முதல்வரிடம் கூறினேன். அவர், தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.