டிசம்பர் 5-ம் தேதி நாடு தழுவிய லாரி ஸ்ட்ரைக்!
சென்னை: சுங்க வரியைச் சீரமைக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி கூறுகையில், "அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டம், கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தனியார் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, 10 நாள்களுக்குள் சுங்க வரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச் சாவடிகளில் வசூலிப்பதைப் போன்று, தனியார் சுங்கச் சாவடிகளிலும் ஒரே சீரான சுங்க வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய நிலையில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டிச. 5-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 52 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காது", என்றார்.