திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய தம்பி
சென்னை: சென்னை திருவொற்றியூரில் திருமண நாளன்று தாலிகட்ட வேண்டிய மாப்பிள்ளை ஓடிவிட்டதால் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் தம்பி தாலி கட்டினார்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் டில்லி பாஸ்கர் (29). வெல்டிங் வேலை பார்ப்பவர். இவருக்கு தீனதயாளன் (32) என்ற அண்ணனும், புருசோத்தமன் (26) என்ற தம்பியும் உள்ளனர்.
இவர்களின் தந்தை இறந்தபிறகு பாஸ்கர் தன் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் கங்கனூரைச் சேர்ந்த வேலு என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது.
திருமணத்திற்கு முதல் நாள் இரவு அழகு நிலையம் சென்று வருவதாகச் சொல்லிச் சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பவில்லை. மறுநாள் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை இல்லாமல் போக பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பேசிய கல்யாணம் நின்றால் நம் பெண்ணுக்குப் பெரும் பாதகமாகி விடும் என்பதால், தீனதயாளனை அணுகி, டில்லி பாஸ்கருக்குப் பதில் அவருடைய தம்பி புருசோத்தமனை தாலி கட்டச் சொல்லி பெண் வீட்டார் கேட்டனர்.
இதையடுத்து அவரை சம்மதிக்க வைத்து குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே திருமணம் நடந்தது.
அதன் பின்னர் பாஸ்கர் மீது திருவொற்றியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் டில்லி பாஸ்கரைத் தேடி வருகின்றனர்.
கல்யாண நாளின்போது மாப்பிள்ளை டில்லி ஏன் ஓடினார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications