தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு

தமிழகத்தில் பருவ மழை தவறிவிட்டதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு நீ்ர் இல்லை.
இதையடுத்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு உரிய பங்கு நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக அம் மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
தமிழகத்தின் கோரிக்கை குறித்து விவாதிக்க சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்று மாலை கூட்டினார்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் அம் மாநில நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் இருப்பு, அணைகளுக்கு நீர்வரத்து, கர்நாடகத்தின் குடிநீர்-பாசனத் தேவைக்குத் தேவையான நீரின் அளவு ஆகியவை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நீண்ட விவாதிக்கப்பட்டது.
அணைகளில் கர்நாடக காவிரி பாசனப் பகுதிகளின் விவசாயத்துக்கும் பெங்களூர், மைசூர், மண்டியா போன்ற நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளி்ன் குடிநீர்த் தேவைக்கும் மட்டுமே போதுமான நீர் உள்ளது.
இதனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பது இப்போது சாத்தியமில்லை. எனவே, இப்போதைய சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது. தமிழகம் மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி விவாதிப்போம்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம் 124.80 அடி. அணையில் இப்போது 124.70 அடி தண்ணீர் உள்ளது. புதன்கிழமை இரவுக்குள் அணை முழுமையாக நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணை முழுமையாக நிரம்பினால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு கூடுதலாக வரும் நீர் காவிரியில் திறந்துவிடப்படும். இவ்வாறு திறந்துவிடப்படும் நீர் தானாகவே தமிழகத்துக்குத்தான் செல்லும்.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு விநாடிக்கு 17,000 கன அடி வீதம் தண்ணீர்வந்து கொண்டுள்ளது. எனவே, இரவுக்குள் அணை முழு அளவை எட்டிவிடும். இதனால், கூடுதல் நீர் திறந்துவிடப்படுவது தவிர்க்க முடியாது.
மேலும் கேரள மாநிலம் வயநாடு மற்றும் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பிற காவிரிப் பாசன அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடும் பிரச்சனை இப்போது எழவே இல்லை. இது தொடர்பாக கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இது குறித்து மேலும் பேச விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications