தமிழகம் முழுவதும் மழை நீடிக்கிறது-இடி, மின்னலுக்கு 8 பேர் பலி
சென்னை: வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கத்திற்கான அறிகுறியாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட கட்டட சேதம், இடி, மின்னல் தாக்கியதில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று கோவை, சேலம், நீலகிரி, ஈரோடு, கடலூர், திண்டுக்கல், திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
திண்டுக்கல், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் பெய்த மழைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள்.
கடலூரில் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த பாரி (37), அமுதா (30), அஞ்சலை (40), தமிழ்செல்வி (40), அம்புஜம் (51) ஆகிய 5 பேரும் வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் பாரி, அமுதா, அஞ்சலை ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். தமிழ்ச்செல்வி, அம்புஜம் ஆகிய 2 பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நல்லாண்பட்டினத்தை சேர்ந்த ராமானுஜம் (44) என்பவர் மின்னல் தாக்கி இறந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி கொளப்பலூர் பெரியண்ண வீதியைச்சேர்ந்தவர் பெருமாள் (75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மழை பெய்த போது வீட்டு முன் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றபோது மின்னல் தாக்கி பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் அருகில் ஈசக்காம்பட்டியைச்சேர்ந்தவர் கோபால் (45). விவசாயியான இவர் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை கொட்டியது. வால்பாறை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அங்கு 21 மி.மில்லி மீட்டர் மழை பதிவானது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கன்னந்தேரியைச்சேர்ந்த சாம்பசிவம் (32) தனது மனைவி மேகலாவுடன் (28) நேற்று மாலை மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் அங்குள்ள ஒரு கடையில் நின்றனர். அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த இடத்திலேயே சாம்பசிவம் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
மகுடஞ்சாவடி அருகே நடுவனேரி அஞ்சகாட்டூர் பகுதியைச்சேர்ந்த வசந்தி (36) என்பவர் வீட்டில் படுத்திருந்தார். அவர் மீது மின்னல் தாக்கியதில் இறந்தார்.
தொட்டபெட்டாவில் இடி விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டாவை மின்னல் தாக்கியது. அங்குள்ள ஒரு சாம்பிராணி மரத்தின் மீது தாக்கியது. இதனால் அந்த மரம் 2 ஆக பிளந்தது. மின்னல் தாக்கிய வேகத்தில் தொட்ட பெட்டாவில் சுற்றுலா பயணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் கட்டிடத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. தடுப்பு சுவர் சேதம் அடைந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழக தொட்டபெட்டா மேலாளர் தர்மராஜ் கூறுகையில்,
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொட்டபெட்டா பகுதியில் மழை பெய்தது. அப்போது அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் டெலஸ்கோப் கட்டிடத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கினார்கள். அப்போது 4.30 மணிக்கு திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் டெலஸ்கோப் கட்டிடம் அருகே இருந்த மரம் 2 ஆக பிளந்தது. இந்த சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்றார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. 3 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஈரோடு நகரில் முக்கிய இடங்களில் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக ஒடியது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. உடுமலை பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் அங்கு ஏற்பட்ட வெயில் தாக்கம் தணிந்து குளுமை ஏற்பட்டது.
திருப்பூரில் நேற்று மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்தது. இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன்பலத்த மழை பெய்தது. இதேபோன்று தாராபுரம் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.
சென்னையில்
சென்னையில் கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் லேசான வெயிலும், மேக மூட்டமாகவும் காணப்படுகிறது. மாலையில் லேசான மழை பெய்து வருகிறது.
வட கிழக்குப் பருவமழை முழு வீச்சில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை வங்கக் கடலில் உருவாகி வருவதால் விரைவில் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாகவே தற்போது பெய்து வரும் மழை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications