கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தமிழகத்திற்கு 20,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர் தற்போது தண்ணீர் திறந்து விடக் கூடிய சாதகமான நிலை என்று 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் எதியூரப்பா கூறியிருந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி உபரி நீரை திறந்து விட்டுள்ளது கர்நாடகா.
2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எதியூரப்பா, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடிய சாதகமான நிலை தற்போது இல்லை. இப்போது உள்ள நீர் இருப்பு எங்களுக்கே போதாது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், காவிரியில் தமிழகத்தின் பங்கு நீரைப் பெற சட்ட ரீதியாக தொடர்ந்து வாதிடுவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
கர்நாடக அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், அணைகளுக்கு அபரிமிதமான நீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்தே முக்கிய அணையான கிருஷ்ண ராஜ சாகரிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடகா.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது. இன்று பிற்பகல் அது அதிகரித்து விநாடிக்கு 7230 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.