தீபாவளி நெருக்கடி: புதிய எரிவாயு இணைப்புகள் நிறுத்தம்!
சென்னை: தீபாவளி நேரம் என்பதால், சமையல் எரிவாயு தேவையைச் சமாளிக்க, புதிய இணைப்பு தருவதை நிறுத்தி வைத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசி) இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (எச்.பி.சி.) ஆகிய மூன்று எண்ணை நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகம் செய்து வருகின்றன.
சமீப காலமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருந்து வருகிறது. பதிவு செய்து 30 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை காலம், அதுவும் மழைக்காலம் என்பதால் எரிவாயு பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய சமையல் இணைப்புகள் வழங்குவதை 3 எண்ணை நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ளன. 5 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகே புதிய இணைப்புகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய இணைப்புக்காக காத்திருப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
"சிலிண்டர் தட்டுப்பாடாக இருப்பதால்தான் இப்படி நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது நிலைமை சீராகி வருகிறது. புதிய இணைப்பு கேட்பவர்களுக்கு பெயரை ஏஜென்சியிடம் பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமாக இணைப்பு வழங்கப்படும்... பொங்கலுக்குப் பிறகு தட்டுப்பாடு நீங்கும்" என்கிறார்கள் இந்தியன் ஆயில் நிறுவனத் தரப்பில்.