காஷ்மீரில் கார் விபத்து-குமரி ராணுவ என்ஜினியர், தந்தை உள்பட 5 பேர் பலி
திங்கள்சந்தை: காஷ்மீர் லே பகுதிக்கு சுற்றுலா சென்றபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து குமரி ராணுவ என்ஜினியர், அவரது தந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
குமரி மாவட்டம் நெய்யூர் முரசங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். கட்டிட கான்டிராக்டர். இவருக்கு பிர்லியன் ஜோசப், டென்சிங் ஜோசப் என்ற மகன்களும், கோல்டு சோபியா என்ற மகளும் உண்டு. ஜோசப்ராஜின் மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
பிர்லியன் ஜோசப் காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் ராணுவத்தில் சிவில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் முரசங்கோடு வந்தவர் திரும்பிச் செல்லும்போது தந்தை ஜோசப்ராஜை அழைத்து சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தந்தை மற்றும் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை அழைத்து கொண்டு ஒரு காரில் லே பகுதிக்குச் சென்றார். அப்போது எதிர்பாராவிதமாக கார் விபத்துக்கு உள்ளாகி 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பிர்லியன் ஜோசப், அவரது தந்தை ஜோசப்ராஜ் மற்றும் நண்பர்கள் மூவர் உள்பட 5 பேரும் பலியானார்கள். தகவல் அறிந்த லே பகுதி ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணங்களை மீட்டனர். இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜோசப்ராஜ் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. இன்று முரசங்கோடு பகுதிக்கு கார் மூலம் எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications