நோக்கியா செல்போன் நிறுவன ரோபோட் எந்திரத்திற்குள் சிக்கி பெண் கோர மரணம்
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் ரோபோட் எந்திரத்திற்குள் சிக்கி பெண் தொழிலாளர் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் 22 வயதான அம்பிகா என்ற தொழிலாளர். இவர் ஆரணியைச் சேர்ந்தவர்.
நேற்று தொழிற்சாலையில் உள்ள ரோபோட்கள் (தானியங்கி எந்திரங்கள்) பணியமர்த்தப்பட்டுள்ள 3வது உற்பத்திப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில், அவரது தலையும், கழுத்தும் அந்த எந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் அலறித் துடித்த அம்பிகாவின் குரலைக் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். கடுமையாகப் போராடி அம்பிகாவை மீட்டனர். ஆனால் அதற்குள் பெருமளவில் ரத்தத்தை இழந்து விட்டார் அம்பிகா.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எந்த சூழ்நிலையில் இந்த விபத்து நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
ஊழியர்களிந் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது பெரும் வருத்தம் தருகிறது என்றார்.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று நோக்கியா நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications