தமிழகத்தை காங். ஆள திராவிட கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்-பச்சமுத்து
திருச்சி: தமிழகத்தை காங்கிரஸ் ஆள திராவிட கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே இருங்களூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடும். மொத்தம் 234 தொகுதகளில் 10 தொகுதிகளு்ககு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். மற்ற தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவர்.
ஒருவேளை கூட்டணி அமைந்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள 10 சட்டசபை தொகுதி வேட்பாளர் இடங்களை விட்டுத்தர மாட்டோம்.
இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் வேட்பாளர் நிறுத்தப்படுவர். அகில இந்திய அளவில் எங்கள் கட்சி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தியாவை 100 குடும்பங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மன்னராட்சி போல் நடைபெறுவதால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.
இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தொழிலில் முதலீடு செய்து, இளைஞர்கள் உழைத்து முன்னேற வழி செய்ய வேண்டும்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை ஆளும் திராவிட கட்சிகளால் தான் மாநில அளவில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. மத்தியிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால், மூன்று மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை தீரும். எனவே, திராவிட கட்சிகள், காங்கிரஸ் ஆட்சி அமைய தியாக மனப்பான்மையுடன் விட்டுத்தர வேண்டும் என்றார்.