For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக பாஜக கொறடா ராஜினாமா-எதியூரப்பாவுக்கு மீண்டும் சிக்கல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பாஜகவின் தலைமை கொறடாவாக இருந்து வந்த ஜீவராஜ், திடீரென்று அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் அதிருப்தி பாஜக எம்எல்ஏக்களால் ஆட்சியை கவிழும் நிலை உருவாகி, மயிரிழையில் தப்பிப் பிழைத்தார் முதல்வர் எதியூரப்பா.

அதிருப்தியுடன் உள்ள மேலும் சில எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் தர எதியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக விரைவில் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளார்.

இந் நிலையில் தனக்கும் அமைச்சர் பதவி கேட்டார் ஜீவராஜ். ஆனால், அவருக்கு பதவி தர முதல்வர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தலைமை கொறடா பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வீர்களா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.

இவரைப் போலவே மேலும் சில பாஜக எம்எல்ஏக்களும் அதிருப்தியில் உள்ளதால் எதியூரப்பா அரசுக்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

11 அதிருப்தி பாஜக எம்எல்ஏக்களையும் 5 சுயேச்சைகளையும் பதவி நீக்கம் செய்ததால், மிகக் குறைவான மெஜாரிட்டியுடன் தான் எதியூரப்பா அரசு தப்பியது. இப்போது மேலும் சில எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், மீண்டும் அரசு கவிழும் சூழல் உருவாகும்.

சட்டசபையில் 224 எம்எல்ஏக்கள் இருந்தால் விகிதாச்சாரப்படி 36 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். இப்போது பாஜக எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் பலம் 208 ஆகிவிட்டது. இதனால் அதிகபட்சம் 31 பேரையே எதியூரப்பாவால் அமைச்சர்களாக்க முடியும்.

எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் நிலையில், இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு எதியூரப்பா தள்ளப்பட்டுள்ளதால், இருக்கும் அமைச்சர்களில் சிலர் பதவியிழக்கலாம். அவர்களும் அதிருப்தி அடைந்தால் கட்சிக்கு நெருக்கடி அதிகரிக்கலாம்.

இதற்கிடையே அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாஜக மூத்த தலைவரும் பெங்களூர் நகர எம்பியுமான அனந்த்குமார் முழு ஆதரவு தந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. அவர் தான் எதியூரப்பாவுக்கு எதிராக எம்எல்ஏக்களைத் தூண்டிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முற்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எதியூரப்பாவை பதவி நீக்கிவிட்டு தானே முதல்வராக நீண்டகாலமாக முயன்று வருகிறார் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அனந்த் குமார். இவருக்கு டெல்லி பாஜக தலைமையில் ஆதரவும், ஆர்எஸ்எஸ்சின் ஆதரவும் உள்ளதால் இவரை சமாளிக்க முடியாமல் எதியூரப்பா திணறி வருகிறார்.

இந் நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை சென்னையிலும் கோவாவிலும் தங்க வைக்க ஆன செலவை வெளியுறவு அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்தா தான் ஏற்றுக் கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

காபி டே நிறுவன அதிபரான இவர் தான் பல லட்சம் வரை செலவிட்டு இவர்களை ஹோட்டல்களிலும் ரிசார்ட்களிலும் தங்க வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X