5 சுயேச்சைகள் தகுதிநீக்கம்-கர்நாடக சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
இதையடுத்து எதியூரப்பா அரசு அடுத்த கண்டத்துக்குத் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் எதியூரப்பா தலைமையிலான அரசுக்கு எதிராக 11 பாஜக எம்.எல்.ஏக்களும், அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த ஐந்து சுயேச்சைகளும் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து இவர்கள் 16 பேரையும் சபாநாயகர் போபய்யா தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கில் சமீபத்தில்தீர்ப்பளித்தது. அதில், 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று தீர்ப்பு வந்தது. இதனால் பாஜக அரசுக்கு லேசான நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
தற்போது ஐந்து சுயேச்சைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இவர்கள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஷாந்தனா கெளடா, அப்துல் நஸீர், போபன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சபாநாயகர் போபய்யாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர் வழக்கு வருகிற 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
16 பேரையும் தகுதி நீக்கம் செய்த பின்னர் நடந்த முதல் வாக்கெடுப்பிலும், அடுத்த சில நாட்களில் நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பாஜக அரசு தப்பியது. பின்னர் 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கில் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தப்பியது எதியூரப்பா அரசு. இந்த நிலையில் தற்போது சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வழக்கிலிருந்து அது தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.