விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் காலூன்ற முயற்சி: மத்திய அரசு எச்சரி்க்கை
டெல்லி: இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் காலூன்ற முயற்சித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்திடம் மத்திய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமர்ஜித் சிங் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி, விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரப்பட வேண்டியதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை சமர்பித்தார்.
அதில், கடந்த ஆண்டு இலங்கை ராணுவத்துடனான போரில் தோற்கடிக்கப்பட்டபின் எஞ்சியிருக்கும் சில விடுதலைப் புலிகள் தமிழகத்தை மையமாகக் கொண்டு மீண்டும் அணி திரள முயல்கின்றனர்.
இது இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
மேலும் ஏற்கெனவே அவர்கள் இணையத்தளத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த இயக்கத்தின் மீதான தடை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.