தீபாவளி நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
நெல்லை: நெல்லையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்டம அலைமோதி வருகிறது. இதைப் பயன்படுத்தி கைவரிசை காட்ட முயலும் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி நெல்லையில் முக்கிய இடங்களில் ஜவுளிகள் மற்றும் நகைகள் எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையொட்டி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டவுன் வடக்கு ரத வீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டுவதை கண்டுபிடிக்க மப்டி உடையிலும் ரோந்து சுற்றி வருகின்றனர். பெண் திருடர்களை பிடிக்க பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அவினாஷ்குமார், உதவி கமிஷனர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ், ராமசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் முருகன், வீரபாண்டி, குருநாதன், பற்குணம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
டவுண், ஜங்ஷன், பாளை, பகுதியில் உள்ள ஜவுளி கடை, ஸ்வீட், பட்டாசு கடைகளி்ல் கூட்டம் அலைமோதுவதால் ஆங்கங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிக்கு ஜவுளிகள் எடுக்க வெளியூர்களில் இருந்தும் பஸ்களில் மக்கள் வருவதால் பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.