மொட்டை போட தடை-நாட்டாமை உள்பட 6 பேருக்கு ரூ.7500 அபராதம்
புளியங்குடி: நெல்லை மாட்டம் புளியங்குடி கோயில் திருவிழாவில் வாலிபர் மொட்டை போட தடை விதித்த நாட்டாமை உட்பட 6 பேருக்கு சிவகிரி கோர்ட் அபராதம் விதித்தது.
புளியங்குடி சிந்தாமணி நாடார் திருமண மண்டபத் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சண்முகையா. இவர் கடந்த 2007ம் ஆண்டு அக் 10ம் தேதி சமுதாயத்திற்கு சொந்தமான மாரியப்பன் கோவில் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக மொட்டை போட சென்றார்.
அப்போது அங்கிருந்த நாட்டாமை ஆறுமுகம் மற்றும் செல்வம், செல்வம், மாரியப்பன், சண்முகையா, மூக்கையா, சமுத்திரம் ஆகியோர் ஊருக்கு வரி பாக்கியுள்ளது என்று கூறி மொட்டை போட விடாமல் சண்முகையாவை தடுத்து விட்டனர்.
இதனால் அரைகுறை மொட்டையுடன் வீடு திரும்பிய சண்முகையா புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை சிவகிரி கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஜகந்நாதன், நாட்டாண்மை ஆறுமுகம், உள்பட 6 பேருக்கும் தலா ரூ.1250 வீதம் ரூ.7500 அபராதம் விதித்தார்.