தாழ்வுநிலை நீடிக்கிறது-மேகக் கூட்ட சுழற்சி நகர்ந்ததால் மழை குறைந்தது
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. அதேசமயம், மேகக் கூட்ட சுழற்சி ஆந்திராவை நோக்கி நகர்ந்திருப்பதால் மழை குறைந்துள்ளது. இருப்பினும் இன்று தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும், புதுவையிலும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு முழு வீச்சில் இன்னும் பெய்ய ஆரம்பிக்கவில்லை.
கடந்த 29ம் தேதி தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை தற்போது ராமநாதபுரத்திலும், தென்மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பரவலாக பெய்துவருகிறது. சென்னையில் லேசான தூறல் மழையும், இதமான மழையுமே காணப்பட்டது. நேற்றும், இன்றும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் அடை மழை கொட்டித் தீர்க்கும்.ஆனால் காணவில்லை. ஏன் இப்படி என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காலை 8.30 மணி நிலவரப்படி மன்னார்வளைகுடா பகுதியையொட்டி, தமிழக-ஆந்திரா கடல் பகுதியில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள மேல் அடுக்கு சுழற்சி மத்திய மேற்கு வங்கக்கடல் வரை பரவியுள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அநேக இடங்களில் மழைபெய்யும். சில இடங்களில் இடியுடன்கூடிய பலத்தமழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் ஒரு சில இடங்களில் மழைபெய்யும் என்றார்.
அதேசமயம், மேல் அடுக்கு சுழற்சி ஆந்திராவில் அதிகமாக இருப்பதால் அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மழை குறைந்துள்ளதாக ரமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications