குமரி மாவட்ட மாஜி பாஜக எம்.எல்.ஏ அதிமுகவில் சேர்ந்தார்
சென்னை : மாஜி பாஜக எம்.எல்.ஏ முத்துக்கிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து விலகி தனது மகனுடன் அதிமுகவில் சேர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளிட்ட அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தனது 25வது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.
பாமக கோவை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் அனுபவ் ரவி, மாவட்ட முன்னாள் அமைப்பு செயலாளர் மோனிகா செந்தில் ஆகியோர் தலைமையில் 10 பேர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது சர்க்கார்சாமக்குளம் ஒன்றிய கழக செயலாளர் வி.சி.ஆறுக்குட்டி உடனிருந்தார்.
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகி தனது மகன் எம்.ஜெகதீசுடன் அதிமுகவில் இணைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் போராட்டம்-கிருஷ்ணசாமி கோரிக்கை:
ஜெயலலிதாவை சந்தித்த கிருஷ்ணசாமி, திமுக அரசுக்கு எதிராக அதிமுக அணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து கூட்டுப் போராட்டங்களை நடத்துவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், திமுக அரசுக்கு எதிராக கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டங்கள், மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், இப்போது சிமென்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து கூட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார் என்றார் கிருஷ்ணசாமி.
தொண்டரின் அஞ்சலிக்கு செல்ல தடை-கிருஷ்ணசாமி:
இதற்கிசையே கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில், உத்தப்புரத்தில் எனது கார் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் நடந்த சாலை மறியலின்போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் சுரேஷ் என்பவர் மரணம் அடைந்தார். கடந்த ஆண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது டி.கல்லுப்பட்டி அருகே தடுத்து நிறுத்தப்பட்டேன்.
இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பே அங்கு சென்று அஞ்சலி செலுத்த முறையான அனுமதி கோரியிருந்தும் அனுமதிக்காமல், திடீரென 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உரிய பாதுகாப்புடன் நான் இ.கோட்டைப்பட்டி செல்வதற்கு போலீஸ் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.