தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்துவிடவில்லை: ராகுல்
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்துவிட்டதாக ஏளனம் செய்தனர், ஆனால் அங்கு காங்கிரஸ் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பது இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த மேடையில் பேசுவதற்கு நான் தயாராக வரவில்லை. ஆனால் என்னைப் பேசச் சொல்லி வலையில் சிக்க வைத்துவிட்டீர்கள்.
காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்திலும் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துவிட்டது என்றுதான் கருதினார்கள். ஆனால் உயிர்த் துடிப்போடு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
படுதோல்வியைச் சந்தித்து வந்த உத்தரப் பிரதேசத்தில், கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 22 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அதேபோல தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸில் 14 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
ஏழைகள் முன்னேற்றம் அடையும்போதுதான் இந்தியா முன்னேறும். ஏழை மக்களால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். ஏழைகளை நாம் முன்னுக்கு கொண்டு வர வேண்டுமானால் பிரதமர் மன்மோகன் சிங் போல் செயல்பட வேண்டும். இந்தியாவின் இன்றைய பொருளாதார முன்னேற்றத்துக்கு மன்மோகன் சிங்கே முக்கிய காரணம்.
இரண்டு இந்தியா உள்ளது. ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழை இந்தியா. இந்த இரண்டு இந்தியாவையும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஒன்றிணைக்க முடியும்.
காங்கிரஸ் மட்டுமே ஏழைகளுக்காக பாடுபடும் தேசியக் கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று பிராந்தியம் சார்ந்ததாகவோ அல்லது ஜாதி, மதம் சார்ந்ததாகவோ உள்ளன என்றார்.
முன்னதாக கூட்ட மேடையில் பின்வரிசையில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் பேசி முடிந்த பின் ராகுல் காந்தி பேச வேண்டும் என்று கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். முதலில் தயங்கிய ராகுல், கோரிக்கை மிகவும் அதிகரிக்கவே அதை ஏற்றுப் பேசினார்.
முன்னதாக இளைஞர்கள் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வெகுவாகப் பாராட்டினர்.
மேலும் கட்சியை வளர்க்க ராகுல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மேடையில் பேசிய அனைத்துத் தலைவர்கள் பாராட்டினர்.