கடத்தல்காரர்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறது திமுக அரசு: ஜெ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவல் துறையின் செயலற்ற தன்மையும், காவல் துறையின் அதிகாரம் ஒரு சிலரின் கையில் சிக்கிக் கொண்டிருப்பதுமே, தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களும், கடத்தல் சம்பவங்களும், குறிப்பாக குழந்தை கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பணத்திற்காக குழந்தைகளைக் கடத்தும் கொடூரச் செயல்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சிறுவன் கிருஷ் ஆனந்த் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். கடந்த ஜூலை மாதம் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா என்ற சிறுவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டான்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி கோவை நகரில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித் குமாரின் மகள் முஸ்கான் மற்றும் மகன் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு, பணத்திற்காக கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து அனைத்துப் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவில் பெற்றுத் தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் கீர்த்திவாசனை சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி என்னை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து; கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; கோவையில் இளம் பிஞ்சுகள் இறந்ததற்குக் காரணமான கொடூரர்களை விரைந்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications